Followers

திருக்குறள்

Tuesday, February 21, 2012

பயமுறுத்தும் குறட்டை

திருப்தியாகச் சாப்பிட்டதன் அடையாளமாகவே முன்பு குறட்டை கருதப்பட்டது.
ஒரு அறையின் கதவை மூடிய பிறகும் கூட அறைக்குள் தூங்குபவரின் குறட்டைச் சத்தம் வெளியே கேட்டால் அது மிகவும் ஆபத்தானது. இத்தகைய குறட்டைக்கு ஹீரோயிக் ஸ்நோரிங் என்று பெயர்.
மூச்சுப்பாதையில் ஏற்படும் தடை காரணமாகவே, குறட்டை ஏற்படுகின்றது. குறட்டைப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூக்கின் பின்புறமும் தொண்டைக்குழியும் சேரும் இடத்தில் உள்நாக்கிலும் அதன் அருகில் உள்ள தசைகளிலும் அழற்சி ஏற்படும். இதனால் தூக்கத்தில் மூச்சு தடைப்பட்டு ஏற்படுகின்ற இந்த தசை அதிர்வு குறட்டையாக வெளியில் கேட்கின்றது.
உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்குக் கூட இரவில் தூங்கும் போது ஆறு அல்லது ஏழு முறை 10 வினாடிகள் மூச்சு தடைப்படும். இது இயல்பாக ஏற்படக்கூடியது.
ஆனால் குறட்டைப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இவ்வாறு 30 அல்லது 40 முறை மூச்சு தடைப்பட வாய்ப்பு உண்டு. இதனால் மூச்சு தடைப்பட்டு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடும். இதனால் உடலில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்துவிடும். ஆக்ஸிஜன் அளவு குறைவதால் உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. நினைவுத்திறன், மூளையின் கணிக்குள் திறன் குறைவு ஆரம்பிக்கும். ஆண்மைக் குறைவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
ஆஸ்துமா, மார்புக்குழல் பிரச்சனையைக் குறட்டை தீவிரப்படுத்தும். குறட்டைப் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் அடிக்கடி மூச்சுத் தடைப்படும் நிலையில் திடீரென எழுந்து மீண்டும் தூங்கி விடுவார்கள். இவ்வாறு தூக்கத்தில் நடுவில் எழுந்திருப்பது அவர்களுக்கு நினைவிருக்காது. உடலின் சுயபாதுகாப்பு காரணமாகவே, மூளையில் உள்ள தூக்கத்திற்கான பகுதி செயலாக்கம் பெற்று, இவர்களைத் தட்டி எழுப்புகின்றது.
குறட்டைப் பிரச்சனை தீவிரமாகும் நிலையில் இரவில் தூக்கம் அடிக்கடி தடைபடும். இதனால் பகலில் அலுவலக நேரங்களில் இவர்களுக்குத் தவிர்க்க இயலாத தூக்கம் வரக்கூடும். இத்தகையோர் வாகன ஓட்டுநர்களானால், விபத்துக்களும் ஏற்படுவதுண்டு.
சிகரெட், மது போன்றவை குறட்டைப் பிரச்சனையைத் தீவிரப்படுத்தும் தன்மை உடையவை.
பெண்களை விட ஆண்கள் அதிகம் குறட்டை விடுகின்றார்கள். உடல் பருமன், காரணமாகவும் குறட்டைப் பிரச்சனை ஏற்படுகின்றது. குறட்டைப் பிரச்சினை உள்ளவர்களுக்கு உடலில் ஆக்ஸிஜன் அளவு 50 சதவீதத்திற்கும் கீழே இறங்க வாய்ப்பு உண்டு. இதனால் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றில் மாறுதல்கள் ஏற்படும். மாரடைப்பு நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.
குறட்டைப் பிரச்சனை தீவிரமாக இல்லாவிட்டால் மாத்திரை எதுவும் தேவையில்லை. உடல் பருமனைக் குறைத்தல், புகை – மது பழக்கங்களைக் கைவிடுதல் பலன் அளிக்கக்கூடும். பிரச்சனை தீவிரமாக இருப்பின் டான்சிலுக்கு அருகில் குறட்டைக்குக் காரணமாக இருக்கும் சதையை லேசரைக் கொண்டு பஸ்பமாக்கி விடுவதே நவீன சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சைக்கு Laser Assisted Uvulo plasty என்று பெயர்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திருமணத்தை பதிவு செய்வதுதான் பெஸ்ட்!

அது ஒரு காலம். பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலே வீட்டுக்குத் தெரியாமல், அல்லது வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்பவர்களுக்கு ஏற்ற திருமணமுறை அது என்ற நிலை. தமிழ் சினிமாக்களைப் பொறுத்தவரை இப்போதும் அப்படித்தான் என்றாலும் உண்மை நிலை மாறிவிட்டது. பதிவுத் திருமணத்தைப் பொறுத்தவரை பலவித தவறான நம்பிக்கைகள் உலவுகின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

தவறான நம்பிக்கை-1
மாப்பிள்ளை மற்றும் அவர்கள் குடும்பத்தாரைப் பற்றி மிகவும் நன்று தெரிந்திருந்தால் அந்த திருமணத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
உண்மை – அப்படியில்லை. நீங்கள் ஒருவரை சட்டப்பூர்வமாக மணந்திருக்கிறீர்கள் என்பதற்கான சான்றுதான் பதிவு செய்து கொள்வது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது மற்றும் உங்கள் பெயருடன் உங்கள் கணவர் பெயரையும் சேர்த்துப் பயன்படுத்தப் போகிறீர்கள் எனும்போது திருமணச் சான்றிதழ் மிகவும் அவசியம்.

தவறான நம்பிக்கை – 2
ஹிந்து திருமண முறைப்படி திருமணம் நிச்சயமாகியிருந்தால் அந்த திருமணம் முடிந்த பிறகுதான் பதிவு செய்து கொள்ள முடியும்.
உண்மை – இது பொதுவான நடைமுறையாக உள்ளது. ஆனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டு பிறகு சம்பிரதாயத் திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம். வெளிநாட்டில் மணமகன் இருந்து திருமணமான சில நாட்களிலே மணமகள், அவருடன் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் முன்னதாகவே பதிவு செய்து கொண்டால் பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பம் செய்வதற்கு வசதி.

தவறான நம்பிக்கை – 3
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்களுக்கு திருமணம் நடத்தித் தரவேண்டும் என்று பதிவாளர் அலுவலகத்திற்குப் போய் நின்றால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது பதிவாளரின் கடமை.
உண்மை – அப்படியில்லை. ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் தேவை. ஏற்கெனவே திருமணம் செய்து கொள்ளாதவராக (அல்லது திருமணம் ஆகியிருந்தால் உரிய முறையில் விவாகரத்து பெற்றவராக) இருக்க வேண்டும். அல்லது ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தால் துணைவர் இறந்திருக்க வேண்டும். மனநிலை சரியாக உள்ளவர்களுக்குத்தான் (அதாவது புத்திசுவாதீனம் உள்ளவர்கள்) திருமணம் செய்து வைப்பார்கள். திருமணத்திற்கு விண்ணப்பிக்கும் இருவரும் ஏற்கெனவே ரத்தவழி உறவுக்காரர்கள் என்றால் அவர்களுக்கு இடையே திருமணம் நடப்பது தடை செய்யப்பட்டிருக்கக் கூடாது. உதாரணத்திற்கு ஹிந்துக்களில் சகோதரர்களின் குழந்தைகள், சகோதர சகோதரிகள்தான். பெரியப்பா மகனை சித்தப்பா மகள் திருமணம் செய்துகொள்ள சம்பிரதாயத்தின்படியும், சட்டப்படியும் அனுமதி கிடையாது.

தவறான நம்பிக்கை – 4
உரிய சான்றிதழ்களை மட்டும் கொடுத்துவிட்டால் காதலர்கள் அடுத்த நாளே பதிவாளர் அலுவலகத்தில் மாலை மாற்றிக் கொண்டு திருமணத்தைப் பதிவு செய்து கொண்டு விடலாம்.
உண்மை – ஸ்பெஷல் திருமணச் சட்டத்தின்கீழ் நடக்கும் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான அறிவிப்பை மணமக்களில் ஒருவர் திருமண அதிகாரிக்குக் கொடுக்க வேண்டும். அந்த அறிவிப்பை பதிவாளர் அலுவலகத்தில் பளிச் சென்று தெரியக்கூடிய ஓர் இடத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைப்பார்கள். இதிலிருந்து முப்பது நாட்கள் முடிந்தவுடன் அந்தத் திருமணத்திற்கு யாரும் ஆட்சேபணை எழுப்பவில்லை என்றால் திருமணம் நடந்து அங்கேயே பதிவு செய்யப்படும். அப்படி ஆட்சேபணை கிடைக்கப் பெற்றால் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்மானம் எடுக்கப்படும்.

கூடுதல் செய்தி:
இப்போதெல்லாம் திருமண மண்டபத்துக்கே வந்து கூட திருமணத்தை பதிவுசெய்கிறார்கள். இதற்கான தனிக்கட்டணம் உண்டு. என்றாலும் கையோடு சான்றிதழையும் சத்திரத்திலேயே கொடுத்துவிட மாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்கள் பதிவு அலுவலகத்துக்கு நேரில் சென்றுதான் பெற்றுக் கொள்ளவேண்டும். பதிவுசெய்த அன்றேகூட இந்தச் சான்றிதழைப் பெறமுடியும்.

படிவம் 1ம் மணமக்களோடு, திருமணத்க்கு வந்திருந்த வேறு இரண்டுபேரும் சாட்சி அளிக்கவேண்டும்.

இந்தக் காலத்தில் பெரியவர்களின் ஆசி, மணமக்களின் விருப்பம் இவற்றைப் போலவே சட்டத்தின் துணையும் மிக அவசியம் என்றாகிவிட்டது. எனவே சட்டம் அளிக்கும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

நன்றி-மங்கையர் மலர்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

தாம்பத்ய வாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க பேசி புரிஞ்சுக்கங்க

தெளிவான நீரோட்டம் போல சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்ய வாழ்க்கையிலும் ஏற்படும் தடுமாற்றங்களை சமாளிக்க அவர்கள் தரும் ஆலோசனைகள்

பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்

அன்றாட வாழ்வில் அலையலையாய் வரும் குடும்ப பிரச்சனைகளில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை. இது மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். இத்தகைய ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி. எனவே அவற்றை நீடிக்க விடாமல் பரஸ்பரம் பேசித் தீர்க்க வேண்டும். ஏனெனில் மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இணைவது நல்லதல்ல என்கின்றனர் உளவியலாளர்கள்.

அவசரம் ஆகாது

தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத்தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும். எனவே உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும்.

மருந்து வேண்டாம்

உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது.

சத்தான உணவுகள்

தாம்பத்ய வாழ்க்கையின் தொடர் வெற்றிக்கு கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த – புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். உயிர்ச்சத்துக்களை அதிகம் தரும் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். தாம்பத்ய உறவிற்கு ஏற்க உணவுப்பொருட்களை அவ்வப்போது சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புரிந்து கொள்ளுங்கள்

தம்பதியரிடையே தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும். அடிக்கடி உறவுக்கு ஆசைப்படும் பெண்களும் உண்டு.ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.

வரையறை தேவை

எதற்குமே ஒரு எல்லை உண்டு. அது தாம்பத்திற்கு மிகவும் அவசியம்.அடிக்கடி வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையறையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம். வயது அதிகமாகும் போது. … தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமை தராது என்கின்றனர் அவர்கள்.

விருப்பங்களை வெளிப்படுத்துங்கள்

அன்றாட சமையலில் சுவை அறிந்து கேட்பது மனித இயல்பு. அதுபோல அந்தரங்கமான வாழ்க்கையிலும் விருப்பத்தை உணர்த்த வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தேவையில்லை. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

இல்லத்தரசியா? நிதி ஆலோசகரா?

வீட்டின் செல்வ செழிப்புக்கு உறுதுணையாகும் பெண்கள், வீட்டுப்பராமரிப்பில் மட்டுமே பெண்கள் கவனம் செலுத்தி வந்த காலங்கள் எல்லாம் பழங்கதையாகிப்போயிற்று. நாகரீக உலகில் ஆண்களின் சேமிப்புகளை முறையாக முதலீடு செய்வதற்கும் செல்வம் சேர்க்கும் அவர்களது முயற்சியில் உதவிடவும் இன்றைய பெண்கள் தயாராகி வருகின்றனர்.

வீட்டின் சேமிப்பை வளப்படுத்துவதில் ஆண்களின் முதல் சொத்தாக விளங்குவது அவர்களது இல்லத்தரசிகளே. செல்வ வளம் சேர்ப்பதில் ஆண்களின் நிதி ஆலோசகராக விரும்பும் பெண்மணி நீங்களானால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். தொடர்ந்து படியுங்கள். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நிதி நிர்வாக நுட்பங்கள். இதை தெரிந்து கொண்டால் பணம் சேர்ப்பதில் உங்கள் கணவருக்கு நீங்கள் சிறந்த துணையாக முடியும்.

திட்டமிடுங்கள்

எதற்கும் திட்டமிடுவது தான் முதல் படி. `திட்டம் சரியாக இருந்தால் பாதி வெற்றி அடைந்தாயிற்று' என்னும் ஆங்கில பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் செலவுகளை- அடிப்படை செலவுகள், அதிக அவசியமல்லாத செலவுகள், சொத்துக்கள் மீதான முதலீட்டு செலவுகள் மற்றும் சேமிப்புக்கள் என வகைப்படுத்திக்கொள்ளுங்கள்.

மளிகை, மருந்து, வாடகை, வீட்டுப்பணியாள் சம்பளம், கல்விக்கட்டணம், மின் கட்டணம், டெலிபோன் கட்டணம் போன்றவை அடிப்படை செலவுகளாகும். சுற்றுலா, சினிமா, உணவு விடுதிகளுக்கு செல்லுதல் போன்றவை அதிக அவசியமல்லாத செலவுகளாகும். வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் ஆகியவை சொத்துக்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளாகும். தங்க ஆபரணங்கள், வங்கி டெபாசிட்டுகள், பங்கு வர்த்தக முதலீடுகள் போன்றவை சேமிப்புகளாகும்.

மேற்சொன்ன ஒவ்வொரு இனத்திற்கும் அடுத்த மாதம் எவ்வளவு பணம் தேவைப்
படும் என்பதை முன்னதாக திட்டமிட்டு அந்தந்த தொகையை தனித்தனியே எடுத்து வையுங்கள்.

வரவோ செலவோ அவற்றை தனித்தனியாக எழுதி வையுங்கள். என்னென்ன வகைக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை சரியாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

உதாரணமாக பேப்பர்காரர், காய்கறிக்காரர், பால்காரர், சலவை தொழிலாளி இவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை, வீட்டுப்பணியாளருக்கு கொடுத்த முன்பணம், வங்கியில் செலுத்த வேண்டிய பணவிடை, மற்றும் காசோலை பற்றிய தகவல்களை ஞாபகமாக எழுதி வையுங்கள். அந்தந்த செலவுகள் முடிந்ததும் அதையும் மறக்காமல் குறிப்பெடுங்கள்.

ஒவ்வொரு இனத்துக்கும் நீங்கள் திட்டமிட்ட செலவு அதனை மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை ஒரு இனத்தில் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக செலவு செய்து விட்டதாக தெரிய வந்தால், வேறு ஏதாவது ஒரு செலவை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியுமா என்று பாருங்கள்.

பல நேரங்களில் உபரி வருமானத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. உதாரணமாக, போனஸ் பணத்தில் தனக்கொரு செல்போன் அல்லது லேப்டாப் அல்லது கேமராவை வாங்கலாமென கணவர் நினைக்கும் போது, தங்க ஆபரணங்கள் வாங்குவதே சரி என மனைவி கருதலாம். இதுபோன்ற தருணங்களில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்பதை இருவரும் கலந்து பேசி முடிவெடுப்பது நல்லது.

கல்வி, மருத்துவம் மற்றும் உணவுக்கு முன்னுரிமை தருவது மிகவும் சரியானது. செலவுகளை கட்டுப்படுத்தி மாதாந்திர வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க கற்றுக்கொண்டால் அவற்றை சிறப்பான அளவில் முதலீடு செய்யலாம்.

அதிக தேவையற்ற செலவுகள், வாகன மற்றும் தனி நபர் கடன்களை கட்டுப்படுத்தினால் சேமிப்பதொன்றும் கடினமானதல்ல. சேமிப்புகள் வளரும் போது அவற்றை சொத்துக்களாக மாற்றிக்கொள்ளலாம்.

சரி. வருவாயை பெருக்குவது எப்படி?

மொத்தமாக வாங்குங்கள். முடிந்த வரை பேரம் பேசி வாங்குங்கள். தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கும் போது வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கணவர் சேமிக்கும் விதங்களை தெரிந்து வைத்திருங்கள். சேமிப்பின் வளர்ச்சியை கண்காணியுங்கள். சேமிப்பின் வளர்ச்சி எதிர்பார்த்த விதத்தில் இல்லாமல் போனால் அவற்றை மாற்றி லாபகரமான இனங்களில் மறு முதலீடு செய்யுங்கள். அதே நேரம் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்.

நீங்களும் நிதி ஆலோசகர் தான் இல்லத்தரசிகளே!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

`ஹெட்போன்’ ஆபத்து!

நடந்து செல்லும்போது `ஹெட்போன்' அணிந்திருப்பவர்கள் விபத்தைச் சந்திப்பது தடாலடியாக அதிகரித்து வருகிறது, எனவே பாதசாரிகள் `ஹெட்போன்களை' தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

செல்போன், ஐபாட் போன்ற மின்னணு சாதனங் களுக்காக ஹெட்போன்களை உபயோகிப்போர், கடுமையான விபத்தில் சிக்கிப் பாதிக்கப்படும் எண்ணிக்கை `பகீரிட'ச் செய்வதாக உள்ளதாம்.

ஹெட்போன்களை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதற்குக் காரணமாகும் நிலையை, `பிரிக்கப்பட்ட கவனம்' அல்லது `கவனக்குறைவு பார்வையின்மை' என்கிறார்கள் மனோவியல் நிபுணர்கள்.

அமெரிக்காவில் 2004-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை பாதசாரிகளுக்கு ஏற்பட்ட விபத்துகள் தொடர்பான பல்வேறு தகவல் தொகுப்புகளை அலசியதன் மூலம் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஹெட்போன் இல்லாமல் செல்போன் பயன்படுத்தியவர்கள், ஹேண்ட்ஸ் பிரீ உபயோகித்தவர்கள், சைக்கிள் ஓட்டிகள் ஆகியோர் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

ஹெட்போன் பயன்படுத்தியதால் விபத்தில் சிக்கி மரணம் அல்லது காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2004- 2005-ம் ஆண்டுவாக்கில் 47 ஆக இருந்தது என்றால், அது 2010- 2011-ல் 116 ஆக இருமடங்காகியுள்ளது.

இந்த 116 விபத்துகளிலும் 70 சதவீதம், உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதில் கால்பங்கு கேஸ்களில், மோதலுக்கு முன் ஹாரன் அல்லது எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் ஹெட்போனில் ஆழ்ந்திருந்ததால் அதைக் கவனிக்காது விபத்தில் சிக்கியிருக்கிறார்கள்.

நீங்கள் ஹெட்போன் பயன்படுத்துபவரா? கவனமாயிருங்கள்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

கொட்டாவியில் இத்தனை விஷயங்களா?

 

இருமல், தும்மல், விக்கல் மற்றும் கொட்டாவி இவை எல்லாம் திடீரென்று நிகழும் சில உடலியல் நிகழ்வுகள். இவற்றுக்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு. இருமல் மற்றும் தும்மல் ஏற்படுவதற்கு காரணம் சுவாசக்குழாய்க்குள் இருக்கும் அழுக்கு, தூசு அல்லது சளி போன்றவற்றை நம் உடலானது வெளியில் உந்தித்தள்ளுவதே.

மாறாக, விக்கல் ஏற்படுவதற்கான காரணம் சற்று சுவாரசியமானது.

நம் மார்புக்கூட்டில் நுரையீரலுக்கு கீழே இருக்கும் `டயாபிரம்' என்னும் தோல் பகுதியானது திடீரென்று வேகமாக சுருங்குவதால், அதிகப்படியான காற்று நம் நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க, தவிர்க்க, `எபிக்லாட்டிஸ்' என்னும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறதாம். அதனால் ஏற்படும் ஒருவித `விக் விக்' எனும் சப்தத்தைத்தான் நாம் விக்கல் என்கிறோம்!

இப்படி, இருமல், தும்மல் மற்றும் விக்கலுக்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும், கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், நம்மில் பலர் கொட்டாவி விடும் ஒருவரைப்பார்த்தால், `பாவம் அவர் ரொம்ப சோர்வாக இருக்கிறார் போலிருக்கிறது' என்றே நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப் பதே மெய் என்பதை கொஞ்சம் மாற்றி, கொட்டாவி பற்றி தீர ஆய்வு செய்து அறிந்துகொள்வதே மெய் என்கிறார்கள் கொட்டாவி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

ஒருவர் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார் என்பது காலத்தை பொறுத்து மாறுகிறது என்றும், சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கண்டறிந்துள்ளார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப்!

வெப்ப அளவுக்கும் கொட்டாவி ஏற்படுவதற்கும் இடையிலான இந்த தொடர்பு, கொட்டாவியானது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதையே காட்டுகிறது என்கிறார் ஆண்ட்ரூ.

ஒரு காலத்துக்கு 80 பேர் என, கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு 160 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்தது.

இம்முடிவின் அடிப்படையில், வெப்பமான சீதோஷ்ண நிலையானது அளவுக்கதிகமாக வெப்பமடைந்துவிட்ட மூளைக்கு ஒரு நிவாரணத்தை அளிப்பதில்லை. மாறாக, கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட்பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்துவிடுகிறது என்கிறார் கள் ஆய்வாளர்கள்.

கொட்டாவி ஏன் ஏற்படுகிறது அல்லது கொட்டாவியின் உயிரியல் பொருள் என்ன என்பது குறித்து ஒரு டஜனுக்கும் மேலான ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்துகொண்டிருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு கருத்து இன்னும் எட்டப்படவில்லை. உதாரணமாக, வெப்ப நெறிமுறை கோட்பாட்டின்படி மூளையின் வெப்ப அளவு அதிகரிக்கும்போது கொட்டாவி தூண்டப்பட்டு மூளையானது குளிர்விக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. மேலும், கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உட்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப்படுகிறது என்கிறார்கள்.

கொட்டாவி விடும் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோய்களான ஸ்க்லீரோசிஸ் மற்றும் எபிலெப்சி ஆகிய இரு மூளைக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வானது உதவியிருக்கிறது என்கிறார் ஆய்வாளர் ஆண்ட்ரூ!

மேலும், மிக அதிகமான எண்ணிக்கையில் கொட்டாவி விடுவதை, உடலின் வெப்ப நெறிமுறையானது குறைந்துவிட்டதா என்பதை கண்டறிய உதவும் ஒரு முன்பரிசோதனையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம் என்று ஆச்சரியப்படுத்துகிறார் ஆண்ட்ரூ.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

முன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்!

திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இடையே தாம்பத்யத்தில் ஏற்படும் மகிழ்ச்சியானது படுக்கையறையோடு நின்றுவிடுவதில்லை. ஆங்காங்கே இலைமறை காயாக சமையலறையில் எழும் சின்ன சின்ன சங்கீதமும், கிணற்றடியில் யாருக்கும் தெரியாமல் நிகழும் சின்ன ஸ்பரிசமும் தம்பதியரை உற்சாகத்திற்கு கொண்டு செல்லும். உறவு மட்டுமல்லாது வீட்டுக்குள் தம்பதியருக்கிடையே நிகழும் முன்விளையாட்டுகளும் அவசியம் என்கின்றனர் உளவியலாளர்கள்.

புதுமண தம்பதியர்களுக்கு உறவைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பும், குறுகுறுப்பும் இருந்து கொண்டேதான் இருக்கும் அதனால்தான் கோவில் குளத்திற்கோ, திரைப்படங்களுக்கோ தம்பதியர்கள் தனியாக சென்றுவர வேண்டும் என்று வற்புறுத்தினர் முன்னோர்கள். திருமண தினத்தன்று நிகழும் சின்ன சின்ன வேடிக்கை, விளையாட்டுக்களும் இத்தகையதே.

தண்ணீர் குடத்திற்குள் ரொமான்ஸ்

ஒரு சின்ன குடத்திற்குள் மஞ்சள் தண்ணீரை ஊற்றி அதனுள் சிறிய மோதிரத்தைப் போட்டு புதுமணத்தம்பதியரை எடுக்கச் சொல்லி அனைவரும் வற்புறுத்த வெட்கத்தால் நெளிந்துகொண்டே இருவரும் கைகளை குடத்தினுள் விட அந்த சின்ன மோதிரத்தை தேடும்போதே இருவரின் கைகளும் உரசிக் கொள்ளுமே,அப்பொழுதே தொடங்கிவிடுகிறது காதலின் முன்விளையாட்டு.

காதல் பாடல்கள்

இது கொஞ்சம் ஒல்டு பேசன்தான் என்றாலும் அவசியமானது. காதல் பாடல்களை மெதுவாய் மனைவியின் காதுகளுக்கு மட்டுமே கேட்குமாறு பாடலாம். அதன் மூலம் உங்களின் எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தியத போலவும் ஆச்சு. உங்கள் மனைவியின் உற்சாகத்தை தூண்டிவிட்டது போலவும் ஆச்சு. என்ன பாட ரெடியாகிட்டீங்களா?

சமையலறை சங்கீதம்

உண்மையிலேயே ரொமான்ஸ் செய்ய ஏற்ற இடம் எதுவென்றால் அது சமையலறைதான். ஏனென்றால் அதில்தான் மையல் ஒளிந்திருக்கிறதே. அவ்வப்போது சமையலில் உதவுவது போல சென்று சின்ன சின்ன ஸ்பரிசங்களின் மூலம் உங்களின் எண்ணத்தை மெதுவாக வெளிப்படுத்தலாம்.

அசத்தலான ஆல்பம்

போராடிக்கும் தருணங்களில் திருமண ஆல்பம், ஹனிமூன் போட்டோக்களை எடுத்து பார்த்து அந்த இன்பத்தருணங்களை மறுபடியும் கண்முன் கொண்டுவரலாம். நெருக்கமாக அமர்ந்து திருமண நாளில் நடந்த விளையாட்டுக்களை வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.

சின்னதாய் ஒரு ஷாப்பிங்

வீட்டிற்கு அருகில் உள்ள ஷாப்பிங் மால்களுக்கு சென்று உங்கள் வாழ்க்கைத்துணைக்கு ஏற்ற பொருட்களை சர்ப்ரைசாக வாங்கித்தருவது காதல் உணர்வுகளை அதிகரிக்கும்.

விடுமுறை கொண்டாட்டம்

எத்தனைநாளைக்குதான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைப்பது என மனைவிக்கு நினைப்பு வரும். அதேபோல் அலுவலகம், வீடு என ஒரே மாதிரியாக இருப்பதும் போராடிக்கும். எனவே தனியாக நேரம் ஒதுக்கி குளிர் பிரதேசங்களுக்கு ஜாலியாய் ஒரு டிரிப் போய் வரலாம்.

சின்ன சின்ன காமெடி

இரவு உணவுக்குப்பின்னர் மனதிற்கு பிடித்த புத்தகத்தை படித்தவாறு அதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளை பரிமாறலாம். தொலைக்காட்சியின் நகைச்சுவை காட்சிகளை ஓடவில்லை மனதை நெருக்கும் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெறலாம்.

வேடிக்கையான தோல்வி

செஸ், கேரம்போர்டு, கார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை ரொமான்ஸ்சாக தொடங்கலாம். ஜெயிக்கும் தருணத்திலும் தோல்வியை தழுவி விட்டுக்கொடுப்பது வேடிக்கையோடு உங்கள் மீதான காதலை அதிகப்படுத்தும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

காதலி உண்மையானவளா? காதலன் நல்லவனா?


உருகி உருகி காதலை வெளிப்படுத்தி விட்டு உறவுக்குப் பிறகு வேறு பெண்ணைத் தேடிச் செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள். பீச், பார்க், தியேட்டர் என்று சுற்றி உல்லாசமாக இருந்துவிட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைகளை கட்டிக் கொண்டு காதலுக்கு `டாட்டா' காட்டும் பெண்களும் இருக்கிறார்கள்.

காதலில் இப்படி இடையூறுகளை சந்திக்காமல் இருக்க என்ன வழி? உண்மையான காதலை கண்டு பிடிப்பது எப்படி? அதற்கு சில எளிய வழிகள்…

`நீ இல்லாம என்னால வாழவே முடியாது. நீ தான் என் உயிர்' என்று டயலாக் விடுபவர்களிடம் உஷாராக இருங்கள். அதிகமாக உணர்ச்சிவசப்படுவது ஈர்ப்பின் அறிகுறி தான். புரிதலுடன் பழகியபின் வருவதே காதல்.

காதலிப்பவர் கொடுக்கும் தகவல்கள் உண்மையானதா என்பதை வைத்து அவரது காதலையும் உண்மையா? இல்லையா? என்று அறியலாம். வேலை பார்க்கும் இடம், வீட்டு முகவரியை சொல்லாதவர்களும், தவறான தகவல் தருபவர்களும் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருப்பார்கள்.

உங்கள் காதலர் நண்பர்கள், தோழிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறாரா? என்று பாருங்கள். அதுபோல நீங்களும் அவரை உங்கள் தோழிகளுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். பிறருக்குத் தெரிந்து காதல் செய்வது ஒருவிதத்தில் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும். அதிக அளவிலான ஏமாற்றத்தையும் தடுக்கும்.

அதேபோல அவரோடு நீங்கள் பழகுவது உங்கள் வீட்டிற்கு பட்டும் படாமலும் தெரிந்திருந்தால் இன்னும் நல்லது. பெற்றோரும் அவரைப் பற்றிய விஷயங்களில் `உஷார்' காட்டுவார்கள்.

காதலர் உரிமையுடன் உங்களிடம் கோபப்படுகிறாரா? திட்டுகிறாரா? சில நேரங்களில் கைநீட்டி அடிக்கவும் செய்கிறாரா? அவை உரிமை எடுத்துக் கொண்டு செய்யும் காரியமாக மட்டும் எண்ணிவிடாதீர்கள். உங்கள் மீதுள்ள நம்பிக்கைக் குறைவும், தன்னம்பிக்கை இல்லாததன் வெளிப்பாடும் கூட இம்மாதிரி கோபமாக வெளிப்படும். இதுபோன்ற குணம் உடையவர்களுடன் நீண்டகாலம் சேர்ந்து வாழ முடியாது. எனவே கோபத்தின் காரணத்தையும், அவரது நடவடிக்கைகளையும் கவனமாக கவனியுங்கள்.

`நாம தான் ஒருவருக்கொருவர் புரிஞ்சிக்கிட்டோமே, தொட்டுப் பேசக்கூடாதா?' என்று பீடிகை போடுவதும், உறவை வற்புறுத்துவதும் உண்மையான காதலாக இருக்க முடியாது. எல்லை மீறாத காதல் நூலிழை இடைவெளியில் தான் இருக்கிறது.

மேற்கண்ட விஷயங்களை வைத்து உண்மையான காதலை கண்டு பிடிக்கலாம். அவரது அன்பு உண்மையானாலும் அவர் உங்களுக்கு சரியான துணைவரா? என்பதை முடிவு செய்ய இன்னும் யோசிக்க வேண்டும். அதற்கான சில விஷயங்கள்…

தன்னையே சுற்றிச் சுற்றி வந்தார் என்பதற்காக காதலை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

`நீ குழந்தை மாதிரி நடந்துக்கிறது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று சொல்கிற காதலர், திருமணத்துக்குப் பிறகு, `நமக்கு திருமணம் ஆகி விட்டது, கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ, குழந்தை மாதிரி நடந்துக்காதேன்னு' திட்டினால் வெறுப்பு விளையும். எனவே பொடி வைத்துப் பேசினாலும் மயக்கத்தில் வீழாதீர்கள்.

நான் உனக்காக எதுஎதையெல்லாம் விட்டுக்கொடுத்தேன், நீ எனக்கு இதைக்கூட செய்யமாட்டியா, இந்த தப்பை பொறுத்துக்க மாட்டியா? என்று உணர்ச்சி பொங்க பேசுபவரும், கெஞ்சுபவரும் சரியான நபரல்ல. அதேபோல `நீ தானே என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னே, நான் இப்படித்தான் இருப்பேன் அட்ஜஸ்ட் பண்ண முடிஞ்சா ஓகே' என்று கண்டிஷன் போடும் பெண்ணும் சரியல்ல. அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக நிகழ வேண்டும்.

வேலையில் இருக்கும் பெண், தனக்கு நிகரான பணியில் இருப்பவரையோ, இணையாக சம்பாதிப்பவரையோ திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இருவரும் ஒருபோதும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்ப்பவராகவோ, தொழிலை ஒப்பிட்டுப் பேசி வாக்குவாதம் செய்பவராகவோ இருந்தால் காதல் அம்பேல்.

அதுபோலத்தான் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்தால் ஒருவர் மற்றவர் மதத்தையோ, நம்பிக்கையையோ விளையாட்டாகக்கூட கேலி செய்யக்கூடாது. உங்கள் காதலர் அப்படிப்பட்டவர் என்றால் ஓ.கே.

ஒருவேளை நல்லவர் என்று நம்பி பழகியபின்பு உங்கள் காதலர் மோசமானவர் என்று தெரிந்தால், தயங்காமல் அவரை விட்டு விலக வேண்டும். அதுதான் தெளிவான முடிவு! `இல்லை, நான் அவரை நம்புகிறேன், அவரை மாற்றிக் காட்டுவேன், என்னால் அவரை மறக்க முடியாது' என்று பிடிவாதம் காட்டுவது உங்களை இழப்புகளில் இட்டுச் செல்லும்.

பள்ளி, கல்லூரியில் தொடங்கும் காதல் பெரும்பாலும் வாழ்க்கை முழுவதும் வருவதில்லை. இதற்குள்ளாக உறவில் கலந்து விடுபவர்கள் வாழ்க்கையில் மோசமான விளைவுகளை சந்திக்கிறார்கள்.

எனவே பக்குவப்பட்ட வயதுக்குப் பிறகு தனது ஆசையை விருப்பப்பட்டவரிடம் தெரிவிப்பவரையும், உறவுக்குள் நுழையாமல் திருமணத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பவரையும் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்யுங்கள். காதல் மாதிரியே வாழ்க்கையும் இனிக்கும்.

***

காதல் இன்று பொழுதுபோக்கே!

`காதலில் ஆண்கள்தான் ஏமாற்றுகிறார்கள்' என்று பெண்கள் குமுறிய காலம் மாறிவிட்டது. `ஏமாற்றும் பெண்களும் இருக்கிறார்கள்' என்பதை இன்றைய இளைஞிகளே ஒப்புக் கொள்கிறார்கள். காதல் இன்று எப்படி இருக்கிறது, பெண்கள் காதலை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி கல்லூரி மாணவிகள் சிலரது கருத்து…

* இன்றைய காதல் 90 சதவீதம் பொழுதுபோக்காகவே இருக்கிறது.

* பெண்களை எளிதில் மயக்கிவிடுவது ஆண்களின் வர்ணனை தான். "நீ ரொம்ப அழகா இருக்கே" என்று சொல்லிவிட்டால் பெண்ணிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அப்படிச் சொல்லியவரை பெண் காதலராக தேர்வு செய்யாவிட்டாலும், பல நேரங்களில் அவர் சொல்லியதை தன் தோழிகளிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள் பெண்கள்.

* பல ஆண்களைப் போன்று பெண்களும் பழகி விட்டு பிரிந்து விடுவதை விரும்புகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், பெண்கள் பெற்றோர் கண்காணிப்பைத் தாண்டி சென்னை போன்ற நகர்ப்புறங்களில் குடியேறி படிப்பதும், வேலை செய்வதும் தான். அவர்கள், தங்களை விரும்பி வரும் ஆண்களை பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள்.

* காதலர் தினமென்றால் காதலருடன் ஜாலியாக பொழுதுபோக்கும் நாள் என்று எண்ணும் பெண்களும் ஏராளம். `பப்' பார்ட்டிக்குச் சென்று நடனம் ஆடுவதை காதலர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். மேல்தட்டு மக்களின் பழக்கமான `பப்' பார்ட்டி இன்றைய காதலர்களுக்கும் இனிக்கிறது.

* ஆண்கள் இப்போது காதலைச் சொல்வதற்கு ரோஜா கொடுப்பதில்லை. எஸ்.எம்.எஸ்.களில் தான் இன்றைய காதல் வளர்கிறது. அத்துடன் தோழிகளிடம் விசாரித்து காதலிக்கு என்ன கலர் பிடிக்கும், என்ன உணவு பிடிக்கும், என்ன கிப்ட் பிடிக்கும் என்பதை தெரிந்து `திடீர் சர்ப்ரைஸ்' கொடுத்து கவர்ந்து விடுவதை நிறைய ஆண்கள் தங்கள் பாணியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

* பெண்கள் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டும் காதலிப்பதில்லை என்றும் கல்லூரி மாணவிகள் சொல்கிறார்கள். இது அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. தன்னைச் சுற்றும் ஆண்களில் நாலைந்து பேரை அவர்களும் கணக்கு பண்ணுகிறார்கள். அதில் பெஸ்ட்டாகத் தோன்றும் ஒருவரை நேசிக்கத் தொடங்குகிறார்கள். அவரிடம் வசதிக்குறைவு தெரிந்தால் இரண்டாம் நபரை தேர்வு செய்யும் வகையிலேயே பழக்கத்தில் வைத்திருப்பார்கள். இருந்தாலும் திருமணத்துடன் இந்த ஆண் நண்பர்களை கைகழுவி விடுகிறார்கள் பெண்கள்.

காதலும், பெண்களின் சிந்தனையும் இன்று ரொம்பத்தான் மாறியிருக்கிறது இல்லையா?!


நன்றி-தினத்தந்தி

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.