Followers

திருக்குறள்

Friday, June 29, 2012

மறையாத `மாமியார் ராஜ்ஜியம்’

மாமியார் ராஜ்ஜியம் எனப்படும் சர்வாதிகாரப்போக்கு பெண்களிடம் இன்னும் இருக்கவே செய்கிறது. புகுந்த வீட்டிற்கு வரும் மருமகள்கள் என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும் இப்படிப்பட்ட மாமியார்களிடம் சிக்கிக்கொண்டு தவிக்கவே செய்கிறார்கள். மருமகள்கள், எப்படித்தான் தலைகீழாக நின்றாலும், மாமியாரிடம் மகள் என்ற அந்தஸ்தை பெற முடிவதில்லை.

மாமியார்கள் இப்படி ராஜாங்கம் செய்ய என்ன காரணம்?

மருமகள்களை மாமியார்கள் அன்னிய பெண்ணாக பார்க்கிறார்கள். அவர்களால் தங்கள் அதிகாரம் பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள். தன் மகனை, மருமகள் தன்னிடம் இருந்து பிரித்து-தனக்கு எதிரியாக மாற்றிவிடுவாளோ என்றும் அவர்கள் பதற்றம் அடைகிறார்கள்.

மகன் மீது ஒவ்வொரு அம்மாவும் அலாதியான அன்பு வைத்திருக்கிறார்கள். தன் எதிர்காலமே மகனை நம்பித்தான் இருக்கிறது என்றும் கருதுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு மகன் மாறிவிடுவானோ என்று பயந்து, தன்னுடைய எதிர்காலத்தை நிலைநாட்டி கொள்ளவும், மகன் மீது உள்ள உரிமையை நிலைநிறுத்தி கொள்ளவும் கடுமையான முயற்சிகளை எடுக் கிறார்கள். அந்த முயற்சியில் மருமகள் என்ற உறவு நசுக்கப்படுகிறது.

தன்னுடைய மகன் எப்போதும் தன்னையே பிரதானமாக நினைக்கவேண்டும், தனக்கே முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணம் எல்லா அம்மாக்கள் மனதிலும் விடாப்பிடியாக இடம் பெற்று இருக்கிறது. அதற்கு தடையாக இருக்கும் ஒரே எதிரி தங்கள் மருமகள்தான் என்று நினைக்கிறார்கள். அப்போது அவர் களை அறியாமலே அவர்களுக்குள் ஒரு மனப் போராட்டம் உருவாகிவிடுகிறது. அதை முறை யாக கையாளத் தெரியாத பெண்கள் மாமி யார்- மருமகள் என்ற புனித உறவை காயப்படுத்திவிடுகிறார்கள்.

உண்மையில் யாரையும் கஷ்டப் படுத்தவேண்டும் என்ற எண்ணம் மாமியார்களுக்கு இல்லை. ஆனால் மகன் மீதுள்ள உரிமை போராட்டத்தால், தங்கள் வீட்டிற்கு வாழ வந்த மருமகள்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர் கள் உணர்வதில்லை. இந்த பாதிப்பு கள் மாமியார்- மருமகள் இடையே உறவு சிக்கல்களை உருவாக்கி, பகையாளிகள் போல் ஆக்கிவிடுகிறது. அப்போது அந்த குடும்பத்தின் வளர்ச்சியும், மகிழ்ச்சியும், எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடுகிறது.

`அனுபவம் என்ற பள்ளியில் மூடன் கற்றுக்கொள்ள மாட்டான்' என்பது பழமொழி. இது சிந்தித்து செயல்படத் தெரியாத மாமியார்களுக்கும் பொருந்தும். மனிதர்கள் தன்னைத்தானே உணர்ந்தாலே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தில் தனக்கு தரப்பட்டிருக்கும் இடம் என்ன, புதிதாக வந்திருக்கும் மருமகளுக்கு தரப்பட்டிருக்கும் இடம் என்ன என்பதை புரிந்துகொண்டு செயல்பட்டால் அவர்கள் மனதில் தேவையற்ற அகங்காரம் தலைதூக்காது. இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு போராடும் நிலையும் மகனுக்கு ஏற்படாது. மகனுடன் தேவை யற்ற வாக்குவாதம், மருமகளை பற்றி குறை கூறி வெட்டி பஞ்சாயத்து செய்வது இதை யெல்லாம் தவிர்த்தால் அது மன அமைதிக்கும், மகனுடைய நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும். மகன் மீது வைத்திருக்கும் அன்பை விஷமாக மாற்றி எதிர்காலத்தை இருட்டாக்கும் செயல்களில் அவர்களுக்கே தெரியாமல் சில அம்மாக்கள் இறங்கி விடுகிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் பதில் மிக விசித்திரமாக இருக்கும். `திருமணத்திற்கு முன் இருந்த மகன் இப்போது இல்லை. வெகுவாக மாறிவிட்டான் அல்லது மருமகள் மாற்றிவிட்டாள்` என்று சொல்வார்கள்.

அந்த மகனின் மனநிலையை நினைத்துப்பாருங்கள். அவன் என்ன நினைப்பான் என்றால், `நமது திருமணத்திற்கு பின்பு அம்மா மாறிவிட்டார். நமது வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்கு பதில் தம் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கிறார்' என்று நினைத்து தன் அமைதியை தொலைத்து அம்மாவை எதிரிபோல் பாவித்துக்கொண்டிருப்பார் என்பதை பல அம்மாக்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை.

திருமணம் ஆன புதிதில் வாழ்க்கையை அனுபவிப்பது என்பது மிக அற்புதமான விஷயம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயம். ஆனால் அதை தொடக்கத்திலே அனுபவிக்க விடாமல் ஆக்கி, காலம் முழுக்க கசப்பை உருவாக்கிவிடுகிறார்கள் சில மாமியார்கள்.

மாமியார் அந்தஸ்து என்பது மரியாதைக்குரிய ஒரு கவுரவமான உறவு. அந்த மரியாதைக்கு தகுதியானவராக அவர் தன்னை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அன்பான அணுகு முறை, பரிவான பேச்சு, விட்டுக்கொடுக்கும் பண்பு, `எதற்கும் கவலைப்படாதே நான் இருக்கிறேன்' என்று மருமகளிடம் காட்டும் நேசம் இவைகள் இருந்தால் போதும் எல்லா மருமகள்களும் வசப்பட்டுவிடுவார்கள். இதுவே வாழ்க்கையின் வெற்றி. இதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும். இதை மனோபலத்தால் மட்டுமே பெறமுடியும்.

மகனுக்கு சரியான துணையை தேர்ந்தெடுத்து கொடுத்து அவனது வாழ்க்கையை பிரகா சிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒவ்வொரு அம்மாவும் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் அதற்கு தான் செய்யவேண்டியதை செய்ய மறந்துவிடுகிறார்கள். புதிதாக வந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து குடும்ப வாழ்க்கை நன்றாக செல்ல உதவாமல், உபத்திரவம் செய்பவர்களாக மாறிவிடு கிறார்கள்.

ஒரு மாமியார், தனது மருமகளிடம் நல்லுறவை பேண வேண்டும் என்றால், அவர் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அந்த ஒரு விஷயம் அவர், அந்த மருமகளுக்கு தான் மாமியார் என்று கருதாமல் அவளுக்கும் தான் ஒரு தாய் என்ற சிந்தனை இருந்தால் போதும். அதற்கு அவர் செயல்வடிவம் கொடுத்தால் நல்ல மாமியார் ஆகிவிடுவார்.

குற்றங்குறை என்பது மனிதர்களின் இயல்பு. அதனால் அதை ஏற்றுக்கொண்டு பக்குவப்பட முன்வர வேண்டுமே தவிர, அதை மற்றவர்களிடம் சொல்லி பெரிதுபடுத்தி அதற்கு ஒரு பூதாகரமான வடிவத்தை கொடுக்கக்கூடாது.

குடும்பத்தில் தனது முடிவுகள் மதிக்கப்படவேண்டும் என்று மாமியார்கள் விரும்புவது நியாயம் தான். அதற்கு அவர்கள் மருமகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பரந்தமனப் பான்மையுடன் முடிவுகளை எடுக்கவேண்டும். அப்படியானால் அந்த முடிவுகளை எல்லோ ருமே ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். மற்றவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத் தும் முடிவுகளை கைவிடவேண்டும்.

ராஜ்ஜியம் செய்யவேண்டும் என்ற மனப்போக்குடன் மருமகள்களுக்கு வேண்டாத கட்டளை கள் இடுவது, வில்லங்கமாக பேசுவது, அவர்களது விருப்பங்களுக்கு இடையூறாக இருப் பது போன்றவைகளை மாமியார்கள் தவிர்க்கவேண்டும். நல்ல வார்த்தைகளை பேசி, நயமான அறிவுரைகளை வழங்கி, அன்போடும், அனுசரணையோடும், ஆதரவோடும் இருந் தால் மருமகள்கள் மனதிலும் மாமியார்கள் நிரந்தரமாக ராஜ்ஜியம் செய்யலாம்.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.