Followers

திருக்குறள்

Friday, February 25, 2011

குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளருங்கள்!


குழந்தை பிறந்த சில நாட்களுக்கு தாய்க்கும், குழந்தைக்கும் அமைதியும், அதிகமான ஓய்வும் தேவை. குழந்தை தினமும் 23 மணி நேரம் தூங்க வேண்டும். தாயும் அதிக நேரம் தூங்க வேண்டும். அந்த நேரத்தில் சத்தமில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குழந்தை பிறந்ததும் உறவினர்கள் பார்க்க வந்து தாய் மற்றும் குழந்தைக்கு தொந்தரவு கொடுக்காமல் சில நாட்கள் கழித்து குழந்தையை பார்த்து கொஞ்சுவதே மிகவும் நல்லது. குழந்தை பிறந்த சில நாட்களுக்கு மற்றவர்கள் தூக்கி கொஞ்சாமல் இருப்பது சுத்தமானது… சுகாதாரமானது!

குழந்தைக்கு ரோல்மாடலே பெற்றோர்கள்தான். அவர்கள் தங்கள் கடமைகளை சரியான நேரத்தில், ஒழுங்காக செய்தாலே குழந்தைகளும் அதை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இரவு 12 மணி வரை டிவி பார்ப்பது, காலையில் தாமதமாக எழுவது, அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது போன்ற பெற்றோரின் பழக்கங்கள் குழந்தைகளிடம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் டிவி பார்ப்பதையோ, வெளியே செல்வதையோ அல்லது யாரிடமாவது ஜாலியாக பேசுவதையோ தவிர்ப்பது நல்லது.

குழந்தைக்கு சேலை மற்றும் இதர துணிகளால் தொட்டில் கட்டுவது கூடாது. இதனால் குழந்தைக்கு பல தீமைகள் ஏற்படும். குழந்தை தன் விருப்பத்திற்கு கை, கால்களை ஆட்டவும், புரண்டு படுக்கவும் முடியாது. தன் நெஞ்சு மற்றும் உடம்பை குறுக்கிக் கொண்டு தூங்க வேண்டிய சூழல் ஏற்படும். காற்றோட்டமும் குறையும். இதனால் குழந்தைக்கு மார்பில் மூக்கடைப்பும், சளியும் ஏற்படும். மேலும் தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் அடிக்கடி விழித்துக் கொள்ளும். இதனால் தாய்க்கும் தூக்கம் கெடும்.

'ஊட்டி வளர்த்த பிள்ளை உருப்படாது' என்பது பழமொழி. சாப்பிடுவதற்கு குழந்தைகள் அடம் பிடித்தால் ஊட்டுவதை நிறுத்துங்கள். சாப்பாட்டைக் கண்டால் ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டாம். சாப்பாடு வேண்டும் என்று குழந்தை கேட்கும் வரை கண்டுகொள்ளாமல் பொறுமையாக இருக்கவும். வீட்டில் உள்ள மற்றவர்கள் சாப்பிடும் போது குழந்தைக்கும் சாப்பாடு வைத்து மற்றவர்களை பார்த்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவும். நாளடைவில் குழந்தைக்கு நல்ல சாப்பாட்டு பழக்கத்தை இது உருவாக்கும்.

குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிட வேண்டாம். ஒப்பீடு செய்வது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் மற்ற குழந்தையை மிஞ்சித் தான் இருப்பார்கள். பெற்றோர்களின் ஊக்குவிப்பினால் குழந்தைக்கு தன்னம்பிக்கை அதிகமாக வேண்டும், மேலும் நீங்கள் கொடுக்கும் பயிற்சியால் குழந்தை மிகவும் திறமைசாலியாக மாறும் சூழல் ஏற்படும். ஆரம்பத்தில் தோல்வி கண்டாலும் ஊக்குவித்தால் குழந்தைகள் முயற்சி செய்து வெற்றி அடைவார்கள்.

குழந்தையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பது தவறு. கண்டிப்பு இல்லாமல் மிகுந்த செல்லத்துடன் வளர்ப்பதும் தவறு. குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளர்க்க வேண்டும். கண்டிப்புடன் வளர்க்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிக்காமல் பயப்படுவார்கள். கண்டிக்காமல் செல்லம் கொடுத்து வளர்த்தால், குழந்தை பெற்றோரை தாம் நினைத்ததைச் செய்யும் அடிமை என்று நினைத்து விடுவார்கள். இதனால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

அடம் பிடிக்கும் குழந்தையிடம் எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் அடிபணியக் கூடாது. தொடர்ந்து குழந்தை அடம் செய்ய ஆரம்பித்தால், அலறினால் யாரும் கண்டு கொள்ள வேண்டாம். குழந்தையை அடிக்கவோ, அதட்டவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம். இது கஷ்டம்தான் என்றாலும் பொறுமையாக பெற்றோர் இருந்தாலே, அடம் செய்தால் நமக்கு எதுவும் கிடைக்காது என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். பின்னர் அமைதியாக இருக்கும்போது பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கவும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, February 23, 2011

உனது அக்கறையை அனுபவிக்கவேனும்



 நீ இயல்பாகத்தான் பேசுகிறாய்.
 எனக்குத்தான் உன்னிடம் பேசுவதே
 இயல்பாகி விட்டது.
 *
 எல்லா மொழியிலும்
 எனக்கு காதலைக் குறிக்கும் ஒரு சொல்
 உனது பெயர்.
 *
 உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும்
 நீ தன்னை ஒரு முறை சுற்றி வந்ததாய் பெருமைப்படுகிறது
 சூரியன்.
 *
 உனது அக்கறையை அனுபவிக்கவேனும்
 இன்னும் சிலநாள் நீடிக்கட்டும்
 எனது காய்ச்சல்.
 *
 நீ பரிசளித்த விலையுயர்ந்த உடையினும்
 எனக்குப் பிடித்த நிறத்துக்காக நீ செலவழித்த
 மூன்று நாள் தேடலில் ஒளிந்திருக்கிறது காதல்.
 *
 நீ பார்த்து பார்த்து
 உன்னிலும் அழகாகிறது
 உன் வீட்டுக் கண்ணாடி.
 *
 குளிரோ வெப்பமோ
 குறைக்கிற ரகசியம் கற்றிருக்கிறது
 உன் முத்தம்.
 *
 இசையென வழிகிறது.
 வீணை நரம்புகளும் உனது விரல் நரம்புகளும்
 காதலில் பதிக்கிற முத்தங்கள்.
 *
 எத்தனை கவிதையெழுதியென்ன?
 பிடித்திருக்கிறதென நீ சொல்லப்போகிற ஒன்றிரண்டைத் தவிர
 மற்றவை எல்லாம் தற்கொலை செய்துகொள்ளப்போகின்றன!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, February 15, 2011

நீ பார்க்காவிட்டாலும் பரவாயில்லை.....

ஒவ்வொரு முறையும்
தொலைபேசி ஒலிக்கும் போது
மனதின் மதில்ச்சுவர்களில்
ஆக்ரோஷமாய் அடிக்கும்
ஆனந்த அலையை
நீயில்லை எனும்போது எழும்
ஏமாற்றத்தில்
உள்ளிளுத்துக் கொள்கிறது
இதயக் கடல்…
 
மெதுவாய்
சிவந்த இதழ்களை வருடி
உன் தோட்டத்து
ரோஜாவுக்கு
நீ
முத்தம் தரும் போதெல்லாம்
எது ரோஜா
என்று தெரியாமல்
தடுமாறி நிற்கிறது என் மனசு…

பாதி நேரம்
உன்னை
மறக்கவேண்டுமென்று
நினைக்கிறேன்.
மீதி நேரத்தில்
உன்னை மறக்க முடியாமல்….

சிவந்த
உன் சிறிய உதடுகளில்
நீ
சாயம் பூசும் போது
உதட்டுச் சாயம் கொஞ்சம்
நிறம் திருடிக் கொள்கிறதே
கவனித்தாயா கண்மணி ?
 
உன்
முகம் பார்க்கும் கண்ணாடியை
நான் திருடிவிட்டேன்
மன்னித்துவிடு…
உன் பிம்பம் விழுந்த
பிரதேசங்கள் மீது எனக்குப்
பயங்கர பொறாமை ..

ஓரமாய் அமர்ந்து
நகம் வெட்டுகிறாய்.
விலகிக் கொஞ்சம்
விரல் வெட்டுவாயோ,
எனும்
என் பதட்டத்தின்
பல்லிடுக்கில்
உதட்டு இரத்தம் ஒட்டுகிறது.

நீ
பார்க்காவிட்டாலும் பரவாயில்லை
என்றுதான்
தொடர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
உன் புகைப்படத்தை....

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

பைத்தியம் என்று

 
பைத்தியம் என்று
எல்லோரும்  
என் மீது 
கல்லையும்
மண்ணையும் 
வாரி வாரி
வீசுகிறார்கள்...... 
நானும்
பொறுத்துக்கொண்டே
இருக்கிறேன்......
நீ எப்போது வந்து
என் மீது
கல்லையும் 
மண்ணையும் 
வீசுவாய் என்று!.......
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, February 13, 2011

கற்பு கொள்ளையர் தினம் என்ற பெயரில் காதலர் தினம்

காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது. கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.


இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது. கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை 'அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.

உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.


காதலிப்போர் கவனத்திற்க்கு :


காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.

பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல, ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.

சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.


காதலிப்பதால் ஏற்படும் இழப்புகள் :


இளம் பெண்களே! பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.


காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே! ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்.


படிக்கும் இளைஞர்களே!


காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.


இளைஞர்களே!


உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.

மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.


பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.


தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.


இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.


இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா? ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் "கள்ளக் காதலன் கொலை" அல்லது "கள்ளக் காதலி கொலை" என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் 'சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?' என்று கேட்டால் "டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்" என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!


டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்


எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, February 11, 2011

நிதமும் தோற்கிறேன் நான்

எப்படித் தொடங்குவது ?
வரப்போகும் பிரளயத்திற்கான
எந்த அறிகுறியும் இன்றி
மிக இயல்பாய் நிகழ்ந்தது
நம் முதல் சந்திப்பு .

ஏனென்று அறிந்திருக்கவில்லை
ஏனோ தவிர்க்க நினைத்தேன்
உதவி கோரி நிகழ்ந்தது
முதல் அழைப்பு .

நல்ல விஷயங்கள் பரிமாறிக் கொள்வோம்
அமைதி உடன்படிக்கையுடன் தொடங்கியது
யுத்தத்துக்கான முதல் பரிமாற்றம்
உன்  குறுஞ்செய்தியுடன் .

பார்க்கவேண்டுமென  திட்டமிடவில்லை
உன் எல்லைவந்து பார்க்காமல் போனதில்லை
பார்வையின் எல்லைகடந்து
ஏதோ நிகழ்வுகள் இதயப்பேழையில்.

இனிப்புகள் பரிமாறிக்கொண்டோம்
இதயக்கசப்புகளை இனிப்பா மறைக்கும் ?
மனதின் இருளறைகள் மெதுவாய்த்திறந்ததில்
இருவர் மனதிலும் ஒளி பிறந்தது .

இணைவோம் என எண்ணவில்லை
இணைந்தோம் .
பிரிவோம் எனத்தெரிந்தே !
இணைந்த பின் பிரிந்தோம் .

மீண்டும் இணைய நினைக்கிறோம்
பிரிவதற்கான உடன்பாட்டுடன்.
நமக்குள் இணைவு என்பதற்கான பொருள்
இருவர் கண்களும் சந்திக்கும் அந்த நொடியுடன் முடிந்துபோகிறது .

பிணைந்து கிடக்கும் மனங்கள் மட்டும்
இணைவு பிரிவு அனைத்தும் கடந்து யுகமாய் நீள்கிறது
என்ன உறவு இது ?
தொலைவுகள் கூடினால் தூரங்கள் தூர்ந்துபோகிறது ?

உனக்காய் வைக்கும் முற்றுப்புள்ளிகள்...
தொடர்ந்து முற்றும் ஆனது...
முடிவு பெறுவதில்லை
முயன்றாலும் முற்றுப் பெறா நினைவுகளுடன்
உனக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து ...
நிதமும் தோற்கிறேன் நான்.

-
சசிகலா
 திருப்பூர்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 நிமிடங்களில் தேர்வு!-காதல்


`பார்த்த முதல் பார்வையிலேயே காதல் பிறந்துவிட்டது' என்பதை நம்பாமல் கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் 3 நிமிடங்களில் தங்களுக்குச் சரியான ஆண்களைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

ஒரு பெண், மூன்றே நிமிடங்களில் ஓர் ஆணின் தோற்றம், உடல் கட்டுமானம், ஆடை அணியும் ரசனை, மணம், வார்த்தை உச்சரிப்பு, மொழித் திறன் ஆகியவற்றை அளவிட்டு விடுகிறாளாம்.

பெண் தனது தோழிகளுடன் குறிப்பிட்ட ஆண் எப்படி உரையாடுகிறான், அவன் வெற்றிகரமானவனா, லட்சியம் மிக்கவனா என்றும் குறுகிய நேரத்துக்குள் கணித்து விடுகிறாளாம்.    ஒரு நபர் தனக்குப் பொருத்தமானவரா, இல்லையா என்று தீர்மானிப்பதற்கு 180 நொடிகள் போதும் என்று பெண்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஓர் ஆணைப் பற்றிய தனது முதல் அபிப்பிராயத்தை பெண்கள் மாற்றிக்கொள்வதும் அரிது என்று தெரியவந்திருக்கிறது. தங்களின் கணிப்பும், தீர்ப்பும் சரியாகத்தான் இருக்கும் என்பது பெண்களின் உறுதியான எண்ணம்.

மூவாயிரம் பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட பென் கே, "ஆண்களுடன் பழகுவதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் உள்ளுணர்வை நம்புகிறார்கள். அது ஏதோ வெகு ஆழத்திலிருந்து வருவது போலத் தோன்றுகிறது. ஒரு மாயாஜாலம் போல அது பெரும்பாலும் சரியாகவும் இருக்கிறது. ஆனால் பெண்கள் மிக விரைவாக முடிவெடுப்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம். ஆண் ஒருவனுடன் சேர்ந்து ஒரு பானம் பருகி முடிப்பதற்குள்ளாகவே அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமாக இருப்பானா, இல்லையா என்று பெண் முடிவு செய்துவிடுவது உண்மையிலேயே வியப்பான ஒன்றுதான்!" என்கிறார் திகைப்பாக.

அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, February 8, 2011

மண்ணாகவே இருந்திருக்கலாம்!

 
உதடுகள்
 கொடுத்துக்கொண்டே இருக்க
 சோர்ந்து போகிறது
 முத்தம்.
 *
 நீயிறங்கி குளிக்கும்போது,
 நீர்த்தொட்டி – பூந்தொட்டி.
 முடிக்கும்போது தேன்தொட்டி
 *
 பாறையில் முளைத்தது பூஞ்செடி.
 மொட்டை மாடியில் நீ!
 நம் சந்திப்பின் முற்றுப்புள்ளி,
 நீ வைக்கும் முத்தப்புள்ளி!
 *
 நீ
 ஓவியமாக்க
 வேண்டிய கவிதையா?
 கவிதையாக்க
 வேண்டிய ஓவியமா?
 *
 வதைத்தே கொல்லும்
 தேவதை நீ!
 *
 உனக்குள் இருக்கும் எனக்குள்
 நீ எப்போது நுழைந்தாய்?
 *
 என் இரவு.
 நீ கனவு.
 என் பகல்.
 நீ நினைவு.
 *
 எங்கு முத்தம் 
 வாங்கினாலும்,
 இதழ்வரிகளில்
 செலுத்த வேண்டும்…
 இதழ் வரி.
 *
 உன் பார்வை,
 கண்காட்சியா?
 மலர்க்காட்சியா?
 *
 நம் சந்திப்புகள்
 இரவில் வேண்டாமென
 நிந்திக்கின்றன…
 நம் நிழல்கள்!
 *
 கதை சொல்கிறேனென சொல்லி
 நீ சொல்வதெல்லாம் கதை.
 செய்வதெல்லாமோ கவிதை!
 *
 முகம் துடைத்த
 கைக்குட்டையைத் துவைக்காதே.
 அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
 அழகு படிந்ததை?
 *
 பிடித்துவிட எத்தனிக்கையில்
 மறைந்து விடுகிறது வானவில்.
 கூடவே என் வானமும்.
 *
 என் காதல் கேள்விகளுக்கு 
 நீயே விடை என்றிருந்தேன்.
 நீயோ கேள்விகள்
 எதுவுமின்றி என்னிடமிருந்து,
 'விடைபெற்றாய்'!
 *
 களிமண்ணை
 சிற்பம் ஆக்கினாய்.
 பிறகு ஏனோ
 உடைத்துப் பார்த்தாய்.
 மண்ணாகவே
 இருந்திருக்கலாம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, February 7, 2011

தனிமை

துயரங்களால்
துவண்டு
கிடக்கிறேன்.

சாய்ந்து கொள்ள
ஒரு தோள் நோக்கி,
என் தேடல்
தொடங்குகிறது.

அம்மா வருகிறாள்.
அவளுக்கே
இதயம் பலவீனம்.
சாய்ந்து கொள்ள
மனமில்லாமல்
நடக்கிறேன்.

நண்பன் வருகிறான்.
மணமான மகிழ்ச்சியோடு.
சாயாமல் நடக்கிறேன்.

காதலி வருகிறாள்.
கையில் திருமண
அழைப்பிதழோடு.

விழுந்து விடாமல்
நடக்கிறேன்.
வழக்கம்போல
தூரத்தில் எ
னக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

சிக்கலாகிப் போனது


நம் நட்பு தூங்கிக் கொண்டு
நான் விழித்திருந்த
ஒரு கனவுப் பொழுதில்
எனக்குள் விழுந்தாய்.

 எனக்கானவள் யாரெனத் தேடி
 உனக்கானவன் நானென்ற முடிவில்
 எனக்குள் விழுந்தது காதல்.

 என் காதல்
 உன் நட்பை உரசிய
 கனமான கணத்தில்
 நானும் உனக்குள் விழுந்தேன்.

 கற்பனையில் கருவாகி
 கவிதையில் உருவாகி
 உனக்குள்ளும் விழுந்தது காதல்.

 நீ,
 நான்,
 நம் காதல்
 சந்தித்தப் புள்ளியில்
 கோலமிட ஆரம்பித்தது காலம்.
 கோலத்தில் சிக்கி
 சிக்கலாகிப் போனது
 நம் காதல் வாழ்வு.

 பிரிவும் துயரும்
 தற்காலிகம் என்றிருந்தேன்.
 நினைவுகளைப் போல
 அவையும் ஆயுற்காலிகம் என்றபடி
 தொடர்பறுத்து விலகினாய்.

 இருவருமே சுயநலவாதிகள் தாம்.
 என் சுயமாக எப்போதும் நீ.
 உன் சுயமாகவும் நீயே!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, February 4, 2011

`கோமா’ ஏற்படுவது ஏன்?


 

`கோமா' எனப்படுவது மனிதர் களுக்கு நீண்ட நேரம் அல்லது நீண்ட காலம் சுயநினைவு இல்லாதிருக்கும் நிலையாகும்.

திடீரென்று ஏன் `கோமா' ஏற்படுகிறது என்பதற்கு மருத்துவர்கள் பல காரணங்களைக் கூறுகிறார்கள். அவற்றில் முக்கியமானது, மூளையில் அடிபடுவது. மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, தகவல்களைப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அத்தகைய மூளையில் அடிபட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டால் அனைத்துப் பகுதிகளுமோ அல்லது ஒரு பகுதி மட்டுமோ செயல் இழக்கிறது. ஒரு பகுதியில் மட்டும் பாதிப்பு ஏற்படும்போது அந்தக் காலகட்ட நினைவுகள் மட்டும் பாதிக்கப்படுகின்றன. அந்த நினைவுகள் மீண்டும் வராமலே போகலாம். அது ஒரு வகை `கோமா'.    இன்னொரு வகை `கோமா', மூளையின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்படுவதால் உண்டாவது. அப்போது உடல் இயக்கம் ஏதும் இல்லாத நிலையில், மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாத இதயத் துடிப்பும், சுவாசமும் எப்போதும் போல நீடிக்கும. உடம்பில் உயிர் நீடித்து, செயல்படாத நிலை, `கோமா'வாகிவிடுகிறது.

மூளையில் பாதிப்பு அதிகம் இல்லையென்றால், `கோமா'வில் இருந்து மீள்வது சுலபம். மருத்துவச் சிகிச்சையின் முடிவில் கோமாவில் இருந்து மீண்டு, மறுபடி நலமான வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம். அப்படி நாள் கணக்கில், மாதக் கணக்கில் கோமா நிலையில் இருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பலர் இருக்கிறார்கள். ஆனால் மூளையில் பாதிப்பு பலமாக இருக்கும்போது `கோமா'வில் இருந்து மீள்வது கடினம். இயற்கை, மூளையைத் தலைக்குள் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. அதையும் மீறி, விபத்து போன்றவற்றின்போது மூளை பாதிக்கப்படும்போதுதான் இந்தக் கஷ்டம் எல்லாம்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

`டென்ட்’ துணியில் இருந்து பிறந்த ஜீன்ஸ்!

ஆஸ்கார் லெவி ஸ்ட்ராஸ் என்பவர் 1849-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு வந்தார். சுரங்கத்தில் தங்கம் தோண்டும் பணி பரபரப்பாக நடைபெற்ற காலம் அது. சுரங்கத் தொழிலாளர்களின் கால்சட்டைகள் வெகு சீக்கிரமே கிழிந்து விடுவதை அவர் கவனித்தார். உறுதியான ஒரு துணியில் பேன்ட் தைத்துக் கொடுத்தால்தான் இவர்களுக்குச் சரிப்படும் என்று அவர் நினைத்தார். டென்ட் அமைக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியின் மீதத்தைக் கொண்டு ஒரு பேன்ட் தைத்தார். சுரங்கத் தொழிலாளர்களுக்கு அது பிடித்துப் போய்விடவே, ஆர்டர்கள் குவிந்தன. ஸ்ட்ராஸ், பிரான்சில் இருந்து `நீம்' என்றழைக்கப்பட்ட கனத்த துணியை வாங்கித் தைத்தார். அதுவே `டெனிம்' என்று பெயர் மாற்றம் பெற்று உலகெங்கும் பரவியது.

`ஜீன்ஸ்'களில் தற்போது காணப்படும் `ரிவிட்' உங்களுக்குப் பிடிக்கும் என்றால், நீங்கள் அல்கலி ஐக் என்ற கவனக்குறைவான சுரங்கத் தொழிலாளிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர், சுரங்கத் தொழிலுக்கான உபகரணங்களை ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் வைத்து விடுவார். அதனால் பாக்கெட்டுகள் அடிக்கடி கிழிந்து போகும்.

அல்கலியின் கிழிந்த பாக்கெட்டுகளை தைத்துத் தைத்துச் சலித்துப் போன அவரது தையல்காரர் என்ன செய்தார் தெரியுமா? அல்கலியை ஒரு கொல்லரிடம் அழைத்துப் போனார். அவரது பாக்கெட்டுகளில் `ரிவிட்' அடித்து விடும்படி வேடிக்கையாகச் சொன்னார்.

`இது ரொம்ப நல்ல யோசனையாயிருக்கே!' என்று அதைப் பார்த்து வியந்த லெவி ஸ்ட்ராஸ், எல்லா ஜீன்ஸ்களிலும் `ரிவிட்' அடிக்கத் தொடங்கி விட்டார்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, February 3, 2011

எந்த வயதில் பெண்கள் அழகு?



ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இதைக் கண்டுபிடிப்பதற்காக 2000 ஆண் மற்றும் பெண்களிடம் கருத்து கேட்டுள்ளது க்யூவிசி என்ற ஷாப்பிங் தொடர்பான சேனல். முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும். மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.

30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.

பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.

கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.