Followers

திருக்குறள்

Wednesday, July 25, 2012

தொப்புளில் வளையம் மாட்டலாமா ?

 

தொப்புளில் வளையம் மாட்டுவது, மார்பில் மாட்டுவது, அதையும் தாண்டிஎங்கெங்கோ வளையம் மாட்டுவதெல்லாம் இன்றைய இளசுகளின் ஃபாஷனாகி விட்டது. அத்தகைய ஃபாஷன் பிரியைகளின் தொப்புளில் மன்னிக்கவும் வயிற்றில் புளியைக் கரைப்பது போல வந்திருக்கிறது புதிய ஆய்வு முடிவு ஒன்று.

உடலில் மாட்டும் வளையங்களும், அதன் விளைவுகளும் குறித்து வெளியாகும் முதல் ஆய்வு இது என்பதால் இது சிறப்புக் கவனம் பெறுகிறது.

அதாவது இப்படிப்பட்ட மற்றும் அப்படிப்பட்ட இடங்களில் வளையம் மாட்டிக் கொண்டு வளைய வரும் இளசுகளில் மூன்றில் ஒருவருக்கு இதனால் உபாதைகள் ஏற்படுகின்றனவாம். மருத்துவ மனைக்குச் சென்று மருத்துவ உதவி பெறுமளவுக்கும், உயிருக்கே ஆபத்தாய் போகுமளவுக்கும் இந்த சிக்கல்களில் சில வலிமையானது என்கிறது இந்த ஆராய்ச்சி.

வீக்கம், இரத்தக் கசிவு, அலர்ஜி, புண் என பல வடிவங்களில் இந்த அசௌகரியங்கள் நேர்வதாக தெரிவித்துள்ளது இந்த ஆய்வை நிகழ்த்திய லண்டனிலுள்ள ஹெல்த் புரட்டக்ஷன் ஏஜென்சி எனும் அமைப்பு.

10053 பேரிடம் நடத்தப்பட்ட இந்த மருத்துவ ஆய்வில் பலர் அங்கீகரிக்கப்படாத இடங்களில் சென்று அங்கம் எங்கும் இந்த வளையங்களை மாட்டிக் கொள்வதாகவும், அப்படிப்பட்ட சூழலில் சிக்கல் அதிகரிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் பங்கு பெற்றவர்களில் 33 விழுக்காடு பேர் தொப்புளிலும், 19 பேர் மூக்கிலும், 9 விழுக்காடு பேர் நாக்கிலும், 9 விழுக்காடு பேர் மார்பிலும், எட்டு விழுக்காடு பேர் புருவத்திலும், நான்கு விழுக்காடு பேர் உதட்டிலும், இரண்டு விழுக்காடு பேர் "அந்த" இடத்திலும், மூன்று விழுக்காடு பேர் இன்ன பிற இடங்களிலும் வளையங்களை மாட்டிக் கொண்டிருந்தார்கள் என்கிறது அறிக்கை.

நாக்கு, மார்பு மற்றும் அந்தரங்க இடங்களில் வளையம் மாட்டியிருந்தவர்களில் பெரும்பாலானோருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டிருக்கிறது.

இந்த உடலில் வளையங்கள், நகைகள் மாட்டும் போக்கு இன்றைய இளசுகளிடையே வலுவடைந்து வருகிறது. ஆர்வக் கோளாறினாலும், வயசுக் கோளாறினாலும் இப்படி புது ஃபாஷன் என்று நகை மாட்டுபவர்களை இந்த அறிக்கை சற்று யோசிக்க வைத்தால் நலம்

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

குண்டாயிருக்கீங்களா ? நீங்க அறிவாளிதான் போல !!!

உங்க உடம்பு ரொம்ப குண்டா இருக்கா ?, நீங்க ரொம்ப அதிகமா யோசிக்கிறீங்கன்னு நினைக்கிறேன் !! என்கிறது கனடா நாட்டு ஆராய்ச்சி ஒன்று. மூளையைக் கசக்கி வேலை செய்பவர்களுக்கு உடல் பருமனாக வாய்ப்பு இருக்கிறது என்பதே அந்த ஆராய்ச்சியின் மையம்.

அதாவது நல்ல அறிவு சார்ந்த வேலைகளைச் செய்யும் போது உடலுக்கு நிறைய கலோரி சக்தி தேவைப்படுகிறதாம். எனவே அந்தத் தேவையை நிவர்த்தி செய்ய அதிகம் சாப்பிட வேண்டிய சூழல் உருவாகுமாம். அதிகம் சாப்பிட்டால் குண்டாவோம் என்பதைத் தனியே சொல்லவும் வேண்டுமா ?

இவர்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் பல்வேறு தேர்வுகளை வைத்து ஒவ்வொரு தேர்வுக்கும் எவ்வளவு கலோரி உடலுக்குத் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கெடுத்திருக்கிறார்கள். குறைவாக மூளையைப் பயன்படுத்த வேண்டிய வேலை செய்தவர்களுக்கு மிகவும் குறைவாகவே சக்தி தேவைப்பட்டிருக்கிறது.

தேவைப்படும் கலோரி, செய்யும் வேலையைப் பொறுத்து மூன்று கலோரியோ முன்னூறு கலோரியோ என ஒழுங்கில்லாமல் அதிகரிக்குமாம். இப்படி அதிகரிக்கும் போது உடலுக்கு ஏதாவது சாப்பிட வேண்டி வருகிறது, அது உடலில் சேர்கிறது.

இவர்களுக்கு குருதிச் சோதனையும் நிகழ்த்தப்பட்டது. தேர்வுக்கு முன் குருதி சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். பிறகு தேர்வின்போதும் சோதனை செய்திருக்கிறார்கள். முதலில் அமைதியாய் இருந்த குளுகோஸ் அளவும் இன்சுலின் அளவும் மூளையைப் பயன்படுத்திச் செய்ய வேண்டிய அறிவு சார் வேலை வந்தபோது எக்குத் தப்பாக எகிறியிருக்கிறது.

இது உடலுக்கு அதிக உணவு வேண்டுமெனக் கேட்கும். உட்கார்ந்து மூளையைக் கசக்கி வேலை செய்பவர்கள் பொதுவாகவே உடற்பயிற்சி செய்யாமல் சோம்பேறிகளாகவே இருப்பார்கள். எனவே இவர்கள் அதிகம் உண்டு, குறைவாய் உடற்பயிற்சி செய்து அதிக எடையுடன் கூடியவர்களாக மாறி விடுகின்றனர்.

இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவைச் சொல்லியிருக்கிறது கனடாவின் கியூபக் நகரில் அமைந்துள்ள லாவல் பல்கலைக்கழகம்.

இனிமேல் யாராவது, "என்னப்பா ரொம்ப குண்டாயிட்டே, தொப்பை வேற யானைக் குட்டியாயிடுச்சு" என்று கிண்டலடித்தால்,

"என்னப்பாஉன்னை மாதிரியா, எனக்கு மூளையைக் கசக்கி வேலை செய்ய வேண்டியிருக்கு இல்லையா" என சிரித்துக் கொண்டே சொல்லி விடுங்கள்.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திருவிழாவுக்கு போகிறீர்களா… ஒரு நிமிடம் !..

அதிர அதிர இசை கேட்கும் விருப்பமுடையவர்களா நீங்கள் ? காதில் ஹெட்போன் மாட்டி உச்ச பட்ச இசையைக் கேட்பவர்களா நீங்கள் ? திருவிழாக்களில் கடவுளே பயந்து ஓடுமளவுக்கு சத்தமாய் பக்திப் பாடல்களை மெய்மறந்து கேட்பவரா நீங்கள் ? உங்களுக்காகவே யூ.கே யிலிருந்து வந்திருக்கிறது இந்த புதிய ஆராய்ச்சி.

திருவிழா அலறல்கள், அதிக சத்தத்தில் கேட்கப்படும் பாடல்கள், இவை காதைச் செவிடாக்கும் அபாயம் உண்டு என எச்சரிக்கிறது இந்த ஆராய்ச்சி.

குறிப்பாக இன்றைய இளைஞர்களிடையே பரவி வரும் இரவு விடுதி ஆட்டங்களும், அதில் போதையுடன் கேட்கும் நூறு டெசிபல்களையும் கடந்த உச்சஸ்தாயி இசையும் காதுகளை முடமாக்கி விடுகிறதாம்.

சுமார் 2700 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் இசை கேட்பவர்களில் 80 விழுக்காட்டினருக்கு காதுகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதிக சத்தத்துடன் இசை கேட்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், முடியாத பட்சத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இசைப் பிரியர்களை இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் எம்மா ஹாரிசன் தெரிவிக்கிறார்.

இன்றைய இளைஞர்களின் காதில் ஆறாவது விரல் போல எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் ஹெட்போன்களில் 80 டெசிபலுக்கும் அதிகமான சத்தம் வருகிறது எனவும், 80 விழுக்காடு இளைஞர்கள் அதிக சத்தத்தில் பாட்டு கேட்பதையே விரும்புகிறார்கள் எனவும் ஒரு ஆராய்ச்சி ஏற்கனவே முடிவு வெளியிட்டிருந்தது.

செல்பேசிகளும், எம்.பி.3 கருவிகளும் மலிந்து விட்ட இந்த காலத்தில் காதுகளைச் செவிடாக்கும் ஆபத்தையும் கூடவே சுமந்து வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதிக சத்தத்தில் பாடல் கேட்பது, தொடர்ச்சியாக நிறைய நேரம் பாடல் கேட்பது, அதிக சத்தம் ஏற்படுத்தும் பொது விழாக்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வது போன்றவற்றை தவிர்ப்பதே (குறைந்த பட்சம் சத்தத்தை விட்டு தூரமாய் நிற்பதே)
காதுகளுக்காய் நாம் செய்யும் ஆரோக்கியமான செயல் ஆகும்

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

பார்களில் அமர்ந்து ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் உள்ளே தள்ளுபவர்களா நீங்கள் ? உங்களுக்கான தகவல் இது.

பீர், வைன், கடலை இவையெல்லாம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி வரும் வாய்ப்பையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது என்கிறது உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.

உடனடி காபி பவுடர் வாங்கி காப்பி போட்டுக் குடித்தால் கூட இந்தச் சிக்கல் வருகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி ! இந்தப் பொருட்களிலெல்லாம் இருக்கக் கூடிய ஒரு அமிலமே இந்தச் சிக்கலுக்கான காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் பைட்டோஸ்ரோஜன்ஸ் எனப்படும் ஒருமூலக்கூறு சிகப்பு வைன், பீர், கடலை போன்ற பொருட்களில் அதிக அளவு இருப்பதாகவும், உடலில் இந்த மூலக்கூறு அதிகரிக்கும் போது அது ஆண்களின் உயிரணுக்களை நீர்த்துப் போகச் செய்து அவர்களுடைய உயிரணு எண்ணிக்கையை அழிக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரணுக்களை இழப்பதுடன், வருங்காலத் தலைமுறையையும் ஆரோக்கியமற்றவர்களாக உருவாக்குகின்றனராம்.

இந்த ஆராய்ச்சியை நடத்தில மருத்துவர் கண்டர் குஹேல், மதுப் பழக்கங்கள் உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் எனும் நிலையைத் தாண்டி ஆண்மையையே பாதிப்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான மாபெரும் எச்சரிக்கை என தெரிவிக்கிறார்.

மது ஆண்மையை அதிகரிக்கிறது என்னும் மூட நம்பிக்கைக்கும், குழந்தையின்மைக்குக் காரணம் பெண்கள் மட்டுமே எனும் ஆணாதிக்கச் சிந்தனைக்கும் இந்த ஆராய்ச்சி ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நாலு இலை விடட்டும் முதல்ல…

அங்கிங்கெனாதபடி எங்கும் பார்க்கலாம் கைப்பேசியில் பேசியபடியே நடக்கும் சிறுவர்கள், மற்றும் பால்ய வயதினரை.

கைப்பேசியில் அதிக நேரம் பேசுவது மூளைக்கு ஆபத்து, கைப்பேசியில் பேசிக்கொண்டே காரோட்டுவது கவனத்தைச் சிதைக்கும் என வரிசையாய் வந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளின் பட்டியலில் புதிதாய் சேர்ந்திருக்கிறது இன்னுமொரு ஆராய்ச்சி.

குழந்தைகள் கைப்பேசியில் பேசிக்கொண்டே சாலையைக் கடக்கும்போது அவர்களுடைய கவனம் 20 விழுக்காடு குறைந்து போகிறது. இதன் மூலம் அவர்கள் பெரும் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது என்பதே அந்த ஆராய்ச்சி.

இந்த ஆராய்ச்சியில் பங்கு பெற்ற டேவிட் ஸ்வேபெல் எனும் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகையில், ' பேசிக்கொண்டே குழந்தைகள் சாலை கடக்கும் போது அவர்களை அறியாமலேயே கவனத்தைச் சிதற விட்டு விடுகின்றனர். பெரியவர்களைப் போல எச்சரிக்கை உணர்வைக் காத்துக் கொள்ள முடியவில்லை" என தெரிவிக்கிறார்.

சுமார் பத்து, பதினோரு வயதுடைய எழுபத்து ஏழு சிறுவர் சிறுமியரை வைத்து நிகழ்ந்தப்பட்ட இந்த ஆராய்ச்சி கைப்பேசியினால் விளையக்கூடிய இன்னொரு ஆபத்தை விளக்குகிறது.

எப்போதும் கைகளில் கைப்பேசியைப் பிடித்துக் கொண்டு தனக்குத் தானே சிரித்தபடி குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டும், வாசித்துக் கொண்டும் திரியும் பால்ய வயதினருக்கும் இந்த ஆபத்து நிரம்பவே இருக்கிறது என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சுற்றி இருப்பவர்களோடுள்ள உறவை துண்டித்துக் கொண்டு தூர இருப்பவர்களுடன் அளவளாவ இந்த கைப்பேசிகள் துணை புரிகின்றன என்பதை பயணங்களிலும், உணவகங்களிலும் நாம் காண முடியும்.

கைப்பேசியின் பயன் பேசுவதில் மட்டுமல்ல, பேசாமல் இருப்பதிலும் தான் என்பதே நிஜமாகியிருக்கிறது இப்போது !

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

காபியும், கருவுறுதலும்…

தினமும் நான்கு கோப்பை காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 விழுக்காடு குறைகிறது எனும் அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்றை டச் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். காபியிலுள்ள காஃபைன் எனும் நச்சுப் பொருளே இதன் காரணம் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.

காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து குருதி அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

தினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியுள்ளது இந்த புதிய ஆராய்ச்சி.

காபியில் உள்ள காஃப்பைன் பெண்களின் முட்டையை வலுவிழக்கச் செய்கிறது எனவும், அந்த நச்சுத் தன்மையின் பாதிப்பின் விளைவாக குழந்தையில்லா நிலை கூட ஏற்படலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதி முக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.

கருவுறுதலில் மட்டுமல்ல, தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் காபி குடித்தால் அந்த நச்சுத் தன்மை கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குமாம்.

காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு தானாம்.

தாய்மையடைவதைத் தடுக்கும் காரணிகளில் புகை பிடித்தல் முதலிடம் பிடிக்கிறது. புகைப்பது குழந்தையின்மைக்கு முக்கிய காரணம், அதன் பிறகு மதுவும், அதிக எடையும், காபியும் வருகின்றன.
காஃபைனினால் நிகழும் விளைவுகளைக் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணமாக, காஃபைன் உடலிலுள்ள மெலடோனின் அளவை பாதியாகக் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும் இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், காபி குடித்தால் தூக்கம் குறைகிறது.

காபி அருந்துவதால் வரும் இன்னொரு மிகப்பெரிய சிக்கல் அது எலும்புகளின் வலிமையைக் குறைக்கின்றது என்பதாகும். எலும்புகள் வலுவிழப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கிறது. குறிப்பாக இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பெண்களை அதிகம் தாக்கும் என்பது கவனிக்கத் தக்கது.

ஒரு சாதாரண நபருடைய லிவர் நூறு மில்லி காஃபைனை வெளியேற்ற இருபத்து நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. நூறு மில்லி காஃபைன் என்பது எவ்வளவு ? ஒரு கப் காபியில் சுமார் 75 முதல் 200 மில்லி காஃபைன் இருக்கும் என்றால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காஃபைன் விஷம் பெண்களுக்கு மட்டும் தானா பிரச்சனையைக் கொடுக்கிறது ? காஃபைனுக்கு ஏனிந்த ஓரவஞ்சனை என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. இது ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பாதிக்கிறது. குறிப்பாக ஆண்களின் உயிர் அணுக்களைப் பாதித்து அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளைக் கூட குறைக்கிறது

காபி குடிக்காமல் என்னால் இருக்கவே முடியாதே ! கொஞ்சம் கூட குடிக்க முடியாதா என அலறும் காபி பிரியர்களை அமைதிப்படுத்த, தினமும் முன்னூறு மில்லிகிராம் காபி என்பது ஆரோக்கியத்துக்கு அதிக ஊறு விளைவிக்காது என்று அறிவிக்கின்றனர் மருத்துவர்கள்

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் !

செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !

பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.

இந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.

அதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.

சக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் "பிளாக் மெயில்" பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

தனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலுமுள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.

"எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்" என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.

போதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.

இன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.

இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன. உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.

சில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.

நவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே "யூ டியூப் (You Tube)" பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

நம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?

1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. "உடனே அழித்து விடுவேன்" எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.

3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.

4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.

5. வெப் கேம் மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6. இண்டர்னெட் காஃபேக்களில் யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.

8. எந்தக் காரணம் கொண்டும் "பிளாக் மெயிலுக்கு" பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

9. யாரேனும் உங்களுக்கு "விவகாரமான" குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். "ஸ்போர்டிவ்"வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.

10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.

11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் "குளோனிங்" செய்யப்படக் கூடும் !

12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.

13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் "அழகை" நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.

14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட "இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…" எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.

எல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

 

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களிக்கலாமே

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

இறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் !

"ஐயோஎன்னால் அப்பாவாக முடியாதே" என இனிமேல் ஆண்கள் யாருமே புலம்பத் தேவையில்லை என்கிறது பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் ஒரு சூப்பர் ஆராய்ச்சி முடிவு.

விந்தணுவும் முட்டையும் இணைந்து கரு உருவாவது தானே இயற்கையின் நியதி. ஒருவேளை நோயினாலோ, வேறு ஏதேனும் காரணத்தினாலோ சரியான விந்தணுக்கள் இல்லாத ஆண்கள் என்ன செய்வது ?

கவலையை விடுங்கள் உங்கள் உடலிலுள்ள ஒரு "ஸ்டெம் செல்" போதும் உங்களுக்குச் சொந்தமான ஒரு விந்தணுவை உருவாக்கி விடலாம் என்பது தான் அந்த ஆராய்ச்சி சொல்லும் ஆச்சரிய சங்கதி. பிரிட்டனின் நியூகாசில் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்தி உலகின் புருவத்தை உயர வைத்திருப்பவர் பேராசிரியர் கரிம் நயிர்னியா.

இன்றைய தேதியில் ஆறு தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கிறது. பழைய காலத்தைப் போல குழந்தையில்லையேல் பழியை பெண்ணின் தலையில் போட்டு விட்டு தப்பிக்கவும் நவீன யுகம் வளர்ச்சி இடம் தருவதில்லை. ஒரு சோதனை போதும் யாருக்குப் பிரச்சினை, என்ன பிரச்சினை போன்ற சர்வ சமாச்சாரங்களையும் புட்டுப் புட்டு வைக்க.

குளோபல் வார்மிங், ஆபீஸ் டென்ஷன், பீட்சா, பர்கர், சீஸ் என கொழுப்பு உணவுகள், நோ எக்சர்சைஸ், மன அழுத்தம் இப்படி ஆயிரத்தெட்டு காரணங்கள் இதைச் சுற்றி. அதனால் இப்போதெல்லாம் ரேஷன் கடை வாசலில் நீளும் கூட்டத்தை விட அதிகமாய் கைனோகாலஜிஸ்ட் களின் வாசலில் கூட்டம் நீள்கிறது என்பது தான் நிஜம்.

உண்மையில், பிரச்சினை இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆண்களிடம் தான். ஜீவனில்லா விந்தணு, வீரியமில்லா விந்தணு, மூவ்மெண்ட் குறைவான விந்தணு, குறைவான எண்ணிக்கை இப்படி எக்கச்சக்கமான பிரச்சினைகள் இந்த உயிரணுவைச் சுற்றி. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாகக் கூடும் இந்த ஆராய்ச்சி என்பதே இப்போதைக்கு மருத்துவ உலகின் நம்பிக்கை.

உலக மருத்துவ வரலாற்றிலேயே முதன் முறையாக எனும் அடைமொழியுடன், ஒரு ஆண் கருவிலிருந்து ஒரு செல்லைப் பிரித்தெடுத்து, , அதை சோதனைக்கூடத்தில் ஸ்பெர்ம் ஆக வளரச் செய்திருக்கிறார் அவர். கருவிலிருந்து தான் செல்லை எடுக்க வேண்டுமென்றில்லை, ஆண்களின் கைகளிலிருந்தே ஒரு ஸ்டெம் செல்லைப் பிரித்து எடுத்து ஒரு ஸ்பெர்ம் செல்லை உருவாக்க முடியும் என நம்புகிறார் பேராசிரியர் கரிம் நயிர்னியா.

எளிதாய் சொன்னாலும் இதன் பின்னணியில் உள்ள உழைப்பு அசாத்தியமானது. ஸ்டெம் செல் ஒன்றை திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி, அங்கிருந்து சாதாரண வெப்பநிலைக்குக் கொண்டு வந்து வைட்டமின்கள் உதவியுடன் ஸ்பெர்ம் ஆக வளர்த்தெடுக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகிறதாம். இந்த விந்தணுவை IVF முறைப்படி நேரடியாக முட்டையில் செலுத்தினால் கரு தயார். ஆண்மையில்லை, விந்தணு இல்லை எனும் ஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை சொல்லிவிடலாம்.

இவர் ஏற்கனவே இந்த ஆராய்ச்சியை எலிகளை வைத்து நடத்தி நிறைய எலிக்குட்டிகளை உருவாக்கினார் என்பது வியப்புச் செய்தி ! ஆனால் மனித விந்தணுவை வைத்து இன்னும் குழந்தையை உருவாக்கவில்லை, காரணம், பிரிட்டனில் அதற்கான அனுமதி இல்லை என்பது தான்.

ஏற்கனவே செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் முறை இருக்கிறது. ஆனால் அதற்கு ஸ்பெர்ம் யாராவது தானமாய் தரவேண்டும், முட்டை யாராவது தானமாய் தரவேண்டும். இரண்டையும் சேர்த்து ஏதோ ஒரு தாயின் கருவறையில் கருவாய் வளர்க்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் " எனக்குள்ள ஓடற இரத்தம் தான் உனக்குள்ளயும் ஓடுது" என டயலாக் அடிக்க முடியாத உறுத்தல் பெற்றோருக்கு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் இந்த புதிய ஆராய்ச்சி மட்டும் நடைமுறைக்கு வந்தால், அச்சு அசலாக பெற்றோரின் குணாதிசயங்களுடன் இயற்கையாய் பிறக்கும் குழந்தைக்குரிய அத்தனை இயல்புகளோடும் செயற்கையாய் ஒரு குழந்தையை உருவாக்க முடியும் என்கிறார் கரீம்.

இந்த ஆராய்ச்சி ஸ்பெர்ம் தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கான கதவுகளை ஒரு சேரத் திறந்திருக்கிறது. உயிரணுக்கள் எப்படி உருவாகின்றன, வளர்கின்றன, என்னென்ன தன்மையில் வலுவடைகின்றன என அனைத்து நுண்ணிய விஷயங்களையும் இனிமேல் விரிவாக அறிய முடியும் என்பது மருத்துவ நம்பிக்கை. அப்படி நடந்தால் "வயாகரா" போல ஒரு மாத்திரை வந்து சர்வ உயிரணுப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த அவசர உலகில் இனிமேல் "அந்த" விஷயங்களெல்லாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்கள் தேவைப்படும் போது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது. "ஏங்க, உங்க கையைக் கொஞ்சம் நீட்டுங்க. ஒரு செல் வேணும், குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறேன்" என மனைவியர் சொல்லும் காலத்தை நினைத்தால் கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கிறது !

இப்படியெல்லாம் நடந்தால் ஆண்களுக்கு இங்கே என்ன வேலை என டென்ஷனாகாதீர்கள். இப்போதைக்கு ஒரு விந்தணுவை உருவாக்க ஒரு ஆணின் ஸ்டெம் செல் கட்டாயம் தேவை என்பதே நிலை. பெண்ணின் ஸ்டெம் செல்லைக் கொண்டு விந்தணு உருவாக்க முயன்ற முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. அப்படி பெண்ணின் செல்லில் இருந்தே ஒரு விந்தணுவும் உருவாக்க முடிகின்ற ஒரு காலம் உருவாகும் போது ஒரு குழந்தைக்கு பெண்ணே தாயுமானவளாகவும், தந்தையானவளாகவும் மாறும் வியப்பின் உச்சகட்டம் உருவாகும் !

இந்த ஆராய்ச்சியின் மிகவும் வியக்கத் தக்க விஷயமே இனிமேல் தான் இருக்கிறது. அதாவது இறந்து போன ஒருவருடைய உடலிலிருந்து கூட ஒரு செல்லை எடுத்து அதை வளரவைத்து ஸ்பெர்ம் ஆக மாற்றி அவருடைய சந்ததியை செயற்கையாகவே உருவாக்கிவிடலாம் என்பது தான் அது !

இறந்து பல வருடங்களானால் கூட இந்த செயற்கை ஸ்பெர்ம் உருவாக்குதல் சாத்தியம் எனும் தகவல் ஜுராசிக் பார்க் படம் போல திகிலூட்டுகிறது.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, July 6, 2012

ஓளிந்துக்கொள்கிறேன்

சலனமற்று
இருந்த
என்னுள்
அடைமழையின்
முதல்
துளியாய்
நீ!!

 

மண்வாசனையை

எழுப்பி
விளையாடும்
சிறு மழையாய்
தூக்கங்களை
எழுப்பிவிட்டு செல்கிறாய்
உன்
சில நிமிட
கனவுகளில்!

 

சில நிமிட

மௌனங்களில்
நம்மைச்சுற்றி
ஓராயிரம்
கவிதை
பட்டாம்பபூச்ச்சிகள்!

           

குளிர்கால

இரவுகளில்

கதகதப்பாய்

போர்த்தி விட்டு

செல்கின்றன

உன்

நினைவுககள்!!!

 


எப்பொழுதும்
மழையில் நனைந்து
விளையாடும்
நான்
இப்பொழுதெல்லாம்
ஓளிந்துக்கொள்கிறேன்
உன் முத்த ஈரங்கள்
அழிந்து விடுமோ
என்று!!!

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.