உன்
கோபங்களை
தாபங்களை
மன்னித்து விடுகிறேன்
முத்தத்தால்
நீ முடிப்பதானால்!
*
புல்லாங்குழல்
அழுவதாகவே
இருக்கின்றது...
நீ வரும் நாட்களில்
மட்டுமே அது
இசையாய் வழிகிறது!
*
மலர் பறிக்கையில்
மேல் விழுந்து
சிலிர்ப்பூட்டும்
பனித்துளியாய்
உன் நினைவு!
*
கை பிரித்து
அவரவர் திசையில்
முன்னேறுகிறோம்...
இன்னும்
பூங்காவில்
முதுகோடு முதுகு
சேர்த்தபடிபேசிக்
கொண்டிருக்கின்றன
இதயங்கள்!
*
என் பார்வைக்கெதிரே
தளிர் இலையொன்று
பழுத்து வர்ணம் மாறி
உதிர்கிறது!
நீ வருகிறாய்
உதிர்ந்திட்ட அவ்விலை
மீளவும் மரம் பொருந்தி
பச்சையாக தொடங்குகிறது!
*
சில முடிகள்
வெளுத்துவிட்டன
தேகம் பலவீனமடைந்து விட்டது
தோல்கள் சுருக்கம்
கண்டுவிட்டன என்றாலும்
என்ன இப்போதும்
காதலின்
குழந்தைகள் நாம்!
*
காதல் பாதையில்
விழி மூடியபடி
பயணிக்கிறேன்
வழிகாட்டியபடி
துணைவருகிறது
உந்தன்
விழியின் ஒளி!
*
உன்னைவிட்டு
பிரிந்து நடக்கும்
தருணங்களில்
என் சவத்தை
நானே சுமந்து
தொடர்கிறேன்!
*
மரணம்
ஒத்த
தூக்கமதிலும்
கேட்டபடியே
இருக்கிறது
உந்தன் விழி
படபடக்கும்
சப்தம்!
*
கொஞ்சினால்
மிஞ்சும்
மிஞ்சினால்
கொஞ்சும்
காதலும்
குழந்தைதான்!
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
No comments:
Post a Comment